Monday, April 26, 2010

ஐ.பி.எல் -"சென்னை அணி தோற்றிருக்கலாமே",சென்னைவாசியின் ஆதங்கம்.



        ஒன்றரை மாதங்களாக நடந்து கொண்டிருந்த 20-20 போட்டிகள் ஒரு 
வழியாக முடிந்து விட்டது.. சென்னை அணி வாகை சூடி விட்டது... நானும் சென்னையை சார்ந்தவன்தான்..ஆனால் சென்னை தோற்றிருக்கலாமே 
என்று தோன்றியது.. அதற்கு ஒரே காரணம் சச்சின்..

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கொண்டிருந்த மும்பை அணி இறுதியிலும் 
வென்று விடும் என்றே நினைத்தேன்.. என் மனதினில் கோப்பையை சச்சின் 
பெற்றுக்கொண்டு பெருமிதம் பொங்க பரிசளிப்பு விழாவில் ரவிசாஸ்திரியிடம் 
தனக்கே உரித்தான மெல்லிய குரலில் பேட்டியளிப்பார் என்றெல்லாம் 
கற்பனை செய்து வைத்திருந்தேன்..

அனைவருமே போட்டியை பார்த்திருப்பீர்கள். எனவே எப்படி சென்னை வென்றது, எப்படி மும்பை தோற்றது என்றெல்லாம் நான் சொல்லிக்கொண்டு இருந்தால் வலது மேற்புறத்தில் இருக்கும் 'X' பொத்தானை அமுக்கிவிடுவீர்கள் என்று நானறிவேன்...

ஆனால் ஏன் சென்னை தோற்று இருக்க வேண்டும் என்று ஒரு சென்னைவாசியான நான் நினைக்க வேண்டும் என்று நீங்கள் கேக்கலாம்.. சென்னை அணி ஒன்றும் சென்னை வீரர்களின் திறமையை கொண்டோ, தமிழக வீரர்களின் திறமையை கொண்டோ, கோப்பையை வென்றிருக்கவில்லை. தோனி, பௌலிங்கர் போன்றோரையே சார்ந்திருந்தது.. தமிழக தொழிலதிபர் வாங்கியதாலேயே,சென்னையின் அணி ஆகிவிடாது.. எனவே சென்னை அணியின் மீது எனக்கு பெரிதாக ஒட்டுதலே இல்லை.. அதுவும் சென்னை அணி எதிர்த்தது சச்சினை... சச்சின் என்றுமே இந்தியர்களின் பிரதிநிதி.. சென்னை அணியா, இந்திய சாதனை மன்னனா என்று வந்ததால், ஒரு இந்தியனாக சச்சினுக்கே எனது ஆதரவு கிட்டியது... சென்னை அணியின் சரிவை கொண்டாடினேன்.. ( ஆனால் கடைசியில் எனது தம்பியிடமும், தந்தையிடமும் மூக்கு உடைபட்டது வேறு விஷயம்.. பரவாயில்லை.. சச்சினுக்க்காகத்தானே... )

சச்சின் எத்தனையோ வெற்றிகளை பெற்றிருக்கலாம்.. ஆனால் இந்த கோப்பை அவருக்கு மிகப்பெரிய பெருமிதத்தை தந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.. ஏனென்றால் அவர் இந்த தடவை,தனது கிரிக்கெட் வாழ்வின் ஒரேயொரு கரும்புள்ளியான 'கேப்டன்'பதவிக்கு லாயக்கில்லாதவர் என்ற கரையை துடைத்து எறியும் வாய்ப்பு பெற்றிருந்தார்..அதுவும் இந்தியாவின் வெற்றிகரமான கேப்டன் தோனியிடம் வெற்றிக் கோப்பையை பறித்து தன்னை சிறந்த அணித்தலைவராகவும் பதிவு செய்திருப்பார்...


தோனிக்கு வாய்த்ததை போன்றதொரு சிறந்த அணி சச்சின் கேப்டன் ஆக இருந்த போது அவருக்கு வாய்க்கவில்லை. ஆனால் கங்குலி போன்றதொரு சிறந்த கேப்டன் உருவாக்கி கொடுத்த அணியை கொண்டு, டோனி பெற்றுக்கொண்டிருக்கும் வெற்றிகள், சச்சினுக்கு நிச்சயமாக அணித்தலைவராக தான் சோபிக்க முடியவில்லை என்ற வருத்தத்தை அடிக்கடி கொடுத்துக் கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை... இந்திய அணியின் வெற்றிகள் சச்சினுக்கு வருத்தம் தருகிறது என்று சொல்லவில்லை... அணித்தலைவராக தோனியின் வெற்றிகள் நிச்சயமாக சச்சினுக்கு வருத்தத்தை தந்திருக்கும்..

ஐ.பி.எல். கோப்பை அந்த வருத்தத்தை நீக்கியிருக்கும்... தோனிக்கு ஐ.பி.எல். லில் கிடைக்கும் வெற்றியும், தோல்வியும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.. ஏனென்றால் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் அவர்..ஆனால் சச்சினுக்கு வெற்றி கிடைத்திருந்தால் நிச்சயமாக அவர் தனது நீண்ட நாள் மனப் புழுக்கத்தில் இருந்து விடுதலை பெற்றிருப்பார்.. கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சந்தோஷத்தையும் பெருமிதத்தையும் தரும் சச்சின் சந்தோஷப்படவும், பெருமிதப்படவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டதை எண்ணினால் வருத்தமாக இருக்கிறது..

கோப்பையை வெல்ல தகுதியான அணியும் சச்சினின் அணிதான்.. தோனியின் அதிர்ஷ்டகரமான வெற்றியினை இன்னொருமுறை காண்பதற்காக தான், தனது அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு கொண்டு சென்றோமா என்று கூட சச்சின் நினைத்திருக்கலாம்.. சச்சின் ஒன்றும் பொறாமை குணம் கொண்டவர் இல்லை.. ஆனால் வெற்றிகளின் மேல் ஆசை இல்லாதவர் இல்லை..  அவ்வாறு ஆசை இல்லாதவராக இருந்தால் இத்தனை சாதனைகளை அவர் புரிந்திருக்கவே முடியாது.. இன்னொரு முறை ஒரு அணித்தலைவராக தனது மிகப் பெரிய வெற்றியை சச்சின் பெறுவதுற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய சந்தேகம் தான்.. ஆனால் சந்தேகமே இல்லாத பிரபலமான வாசகம்....
"கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் அதன் ஒரேக் கடவுள்" 

Sunday, April 11, 2010

ஹிட்லர் - பாகம் 2 - நாடோடியும் திறமையால் அதிபராகலாம் ..

     (கடந்த பதிவிற்கு நீங்கள் அளித்த ஆதரவு எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்தது.. எனவே தாமதமில்லாமல் அதன் தொடர்ச்சியை தருகிறேன்... முடிந்தவரை தமிழில் தரவே முயல்கிறேன். ஆனாலும் சில இடங்களில் தமிழிஷ் எட்டிப் பார்க்கலாம். தமிழ் ஆர்வலர்கள் என்னை மன்னிக்கவும். திருத்தல்களை தெரிவிக்கலாம். புதியவர்கள் முந்தைய இரு பதிவுகளை படித்தால் தெளிவாக உணரலாம்.)   
      அடிமைத்தனமான குழந்தை பருவத்தை தாண்டி ஓவியராகும் முயற்சியிலும் தோல்வியுற்று நாடோடியாகத் திரிந்த ஹிட்லர் முதல் உலகப்போரின் சமயத்தில் ராணுவத்தில் சோல்ஜராக சேர்ந்தார்.. அங்கே அவருக்கு 'ரன்னர்' பணி தரப்பட்டது.. முன்னணியில் போரிடும் வீரர்களுக்கு தகவல்களையும் கட்டளைகளையும் சுமந்து ஓடிச் சென்று தருவதுதான் 'ரன்னர்' பணி.. துப்பாக்கிக்குண்டுகள் பொழிய, வெடிகுண்டுகள் முழங்கிடும் போர்க்களத்தில், தனது வீரத்தை வெளிக்காட்ட இதுதான் சமயம் என்று ஹிட்லர் வெறி பிடித்ததை போல ஓடினார்.. ஆச்சரியம் என்னவென்றால் ஒரு குண்டு கூட அவர் மேல் படவில்லை என்பதுதான்.. அவர் துணிவையும் கடமை உணர்வையும் பாராட்டி, ராணுவம் அவருக்கு 'Iron Cross' என்னும் பதக்கம் அணிவித்துக் கௌரவம் செய்தது. ( நம் அனைவருக்கும் நமது உறுதியையும் திறமையையும் உணர்ந்துக் கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்படுகிறது. ஹிட்லரின் உறுதியை அவரே உணர்ந்து கொண்ட தருணம் இதுவாக இருக்கலாம் ).

          ஆனால், உலகப்போரின் போது எதிரிகளால் 'மஸ்டர்ட்' வாயு வீசப்பட்டதால் ஹிட்லரின் ஒரு கண் தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. நுரையீரலும் பாதிக்கப்பட மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. அந்த சமயத்தில் ஜெர்மனி முதலாம் உலகப்போரில் சரண் அடைந்தது. மருத்துவமனையில் இருந்த ஹிட்லர் 'துரோகம் இது' என்று ஓலமிட்டவாறு கதறி அழுதார். " கம்யூனிஸ்ட்களும் யூதர்களும் தான் ஜெர்மனியின் தோல்விக்கு ரகசியமாக வேலை செய்தார்கள். அவர்களை அழிக்காமல் விடமாட்டேன் ! " என்று தனது மனதில் அவர்களின் மேல் உள்ள வெறுப்பை முதன்முறையாக வெளிப்படுத்தி கர்ஜித்தார் ஹிட்லர்.

        மருத்தவமனியில் இருந்து வெளிவந்த ஹிட்லர் புதிதாக தொடங்கப்பட்டிருந்த 'தேசிய சோசியலிஸ்ட் ஜெர்மன் தொழிலாளர் கட்சி' யில் உறுப்பினராகச் சேர்ந்தார். அப்போது அந்த கட்சியின் உறுப்பினர் பலமே சில நூறு தான்.. அந்த கட்சியின் ஜெர்மனி மொழியின் சுருக்கமே 'நாஜி'. ( இதுவே உலக சரித்தரத்தின் சக்தி வாய்ந்த இரு எழுத்தாக பின்னாளில் மாறியது ). மாலை நேரங்களில் யார் வீட்டு மாடியிலாவது கூடி, அரசை திட்டித் தீர்ப்பதுதான் அந்தக் கட்சியின் பொழுதுப்போக்காக இருந்தது. 1920, பிப்ரவரி 29 ம் தேதி, அந்தக்கட்சியின் முதல் பொதுக்கூட்டம் நடந்தது. ஹிட்லர் தனது முதல் உரையை தொடங்கினார். உணர்ச்சிப் பிழம்பாய், உடல் நடுங்க, கண்கள் கலங்க, ஆவேசப் பெருக்கோடு அவர் ஆற்றிய உரையில் மொத்த மக்கள் கூட்டமும் உணர்ச்சிவசப்பட்டு பரவசத்துடன் ஆராவாரம் செய்தது. அன்று அந்த பெருங்கூட்டத்தை முழுமையாக ஆக்கிரமித்தார் இளம் தலைவர் ஹிட்லர். அவரின் சக்தியை அவரே உணர்ந்த தினம் அது.
    
           அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஹிட்லரின் உரையை கேட்பதற்காகவே பல்லாயிரக் கணக்கானவர்கள் திரண்டனர். உலகின் மிகச்சிறந்தவர்கள் ஜெர்மனியர்கள் என்ற பெருமிதத்தை அவர்களிடம் விதைத்தார் ஹிட்லர். 'ஸ்வஸ்திகா' சின்னத்தை கட்சியின் சின்னமாக பயன்படுத்தினார்.

( புகைப்படத்தில்  கூட்டத்தில் ஒருவராக ஹிட்லர்)
                1923 -ல், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக ஹிட்லரையும் அவரது சகாக்களையும் சிறையில் அடைத்தது ஜெர்மன் அரசு. ( முதல் பொதுக் கூட்டம் நடத்திய மூன்று ஆண்டுகளில் ஒரு கட்சி ஆளும் அரசையே பயமுறுத்தும் அளவிற்கு உயர்ந்தது ஹிட்லரால் தான் என்றால் அது மிகை இல்லை. இத்துணைக்கும் அவர் திரைப்பட நடிகரோ, அரசியல் குடும்ப வாரிசோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.) சித்தாந்தமில்லாத தனது கட்சிக்கு ஹிட்லர் சித்தாந்தத்தை உருவாக்கியது அப்போதுதான். சிறையில் இருந்தவாறு 'எனது போராட்டம்' ( Mein kampf ) என்ற நூலை சிறையில் இருந்தபோது எழுதினார். 'இனம்' என்ற விஷயத்தை மூலதனமாக பயன்படுத்த தொடங்கியதும் அப்போதுதான்.

அந்த புத்தகத்தில் உலகை வழிநடுத்தும் தகுதி உடையவர்கள் ஜெர்மானியர்கள் மட்டும்தான் என்று முழங்கினார் ஹிட்லர். யூதர்களையும் கம்யூனிஸ்ட்களையும் மிகக் கேவலமாக தனது புத்தகத்தில் சாடினார். யூதர்கள், ரஷ்யர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத ஒரு புது யுகத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆபத்தான கருத்தை முன்வைத்தார். மற்றவர்களையும் தனது கருத்திற்கு உடன்பட வைத்தார். அந்த சமயம், இந்தியா பிரிட்டனின் காலனியாக அடிமைபடுத்தப் பட்டிருந்தது. ஹிட்லர் தனது புத்தகத்தில், ரஷ்யா ஜெர்மனியின் இந்தியாவாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.


     ஹிட்லரின் பேச்சாற்றலால் கட்சி வியக்கத்தக்க வேகத்தில் வளர்ந்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலில் ஹிண்டன்பெர்க் என்னும் மூத்த தலைவருக்கு எதிராக போட்டியிட்டு தோற்றார். ஆனால் ஹிண்டன்பெர்க் கட்சியினருக்கு ஆட்சியமைக்க நாஜி கட்சியினரின் ஆதரவு தேவைப்பட்டது. எனவே கூட்டணி அரசில், ஹிட்லருக்கு 'சான்சலர்' பதவி கிடைத்தது. அதிபருக்கு அடுத்த அதிகாரம் கொண்ட பதவி.ஆனால் ஹிட்லரிடம் இருந்த பயத்தின் காரணமாக அதிகாரங்கள் குறைக்கப்பட்டே தரப்பட்டது. அந்த சமயம் பார்லிமெண்டில் தீப்பற்றி கொள்ள கம்யூனிஸ்ட்களே இதற்க்கு காரணம் என்று முழங்கி, அவர்களை அடக்க அதிகாரங்களை பெற்றுக் கொண்டார். 1934 -ல் ஹிண்டன்பெர்க் இறந்துவிட, ஜனாதிபதி பதவியை கைப்பற்றினார் ஹிட்லர்.


     ஜனநாயகம் முறையில் ஆட்சியை பிடித்த ஹிட்லர், தனது திறமையால் ஜெர்மனியின் பொருளாதார தரத்தை உயர்த்தி, ஜெர்மனியர்களால் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டதும், பிறகு கொலைகள் செய்யும் சர்வாதிகாரியாக மாறியதும், அதனால் வீழ்ச்சியடைந்ததும் வரும் பதிவுகளில்...

( புதிதாக பதிவுகளை எழுத தொடங்கிய எனக்கு உங்களின் ஊக்கம் மகிழ்ச்சி அளிக்கின்றது.. ஊக்கமளித்தவர்களுக்கு நன்றி.. நான் உங்களிடம் இருந்து எதிர்மறையான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன். )

Saturday, April 10, 2010

ஹிட்லர் - நாயாக நடத்திய தந்தையும், வீணாக கழிந்த இளமையும்..

           உலகின் மிகப்பெரிய கமாண்டர்களில் ஒருவரான ஹிட்லர், சில பெரும் தவறுகளை செய்ததால் வீழ்ச்சியடைந்தார்.. அவரின் இளமைக்காலத்தில் வருங்காலத்தில் தான் ஒரு மிகப்பெரிய உயரத்தை அடைவோம் என்று அவருக்கே கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. உயரத்தில் இருந்த போது, மிருகமாக மாறி, வீழ்ச்சி அடைவோம் என்றும் உணர்ந்திருக்க வில்லை..
           ஜெர்மனி நாட்டையே தனது கையசைவில் வைத்திருந்த ஹிட்லர் ஜெர்மனியர் இல்லை.. ஆஸ்திரியாவில் பிறந்து, ஜெர்மனிக்கு குடியேறியவர்.. (மண்ணின் மைந்தன் குரல் எழுப்ப பால் தாக்கரே அங்கே இல்லை போலும்..)
           ஹிட்லரின் பாட்டிக்குத் தன கணவர் யார் என்றே தெரியாது என்றும், அவரை ஏமாற்றியவர் ஒரு யூதர் என்றும், அதனால் தான் பிற்காலத்தில் யூத இனத்தை அழிக்க ஹிட்லர் கிளம்பியதாகவும், ஆதாரமில்லாத தகவல்கள் கூறுகிறது.. ஹிட்லரின் தந்தை அலோய்ஸ், தந்தை பெயர் தெரியாத காரணத்தாலேயே எப்பொழுதும் சோகமாகவே காணப்படுவாராம்.. 
          அலோய்ஸ் கண்டிப்பான தந்தை.. சுங்க இலாகாவில் சாதாரண அதிகாரி.. அவர்  ஹிட்லரையும் அரசுப்பணியில் சேர்க்க விருப்பப்பட்டார்.. ( அரசையே நிர்வகிக்க போகிறார் எனத்தெரியாமல்.. ) ஆனால் ஹிட்லரின் விருப்பமோ ஓவியராக வேண்டும் என்பது..


        குடிப்பழக்கம் கொண்ட தந்தை, ஹிட்லரின் தாயை போதையில் ஏசுவது ஹிட்லருக்கு அவரின் மேல் வெறுப்பை அதிகரித்தது.. நிதானமாக இருந்தாலும் குடும்பத்தினரை அடிமையாக நடத்துவார்.. ஹிட்லரையும், வீட்டில் உள்ள நாயையும் ஒரே மாதிரிதான் நடத்துவார்.. 'அடால்ப்' என்று பெயர் சொல்லி ஹிட்லரை கூப்பிட மாட்டாராம்.. அலோய்ஸ் ஒரு விசிலை எடுத்து ஊதியதும், ஹிட்லர் ஓடிவந்து 'அட்டென்ஷ'னில் நிற்க வேண்டும்..  
       ஆனால் ஹிட்லருக்கு பதினாலு வயதிருக்கும் போதே, அவர் தந்தை இறந்துவிட்டார்.. மாதாமாதம் வரும் அரசாங்க உதவிப்பணத்தில் குடும்பம் ஓடியது.. பதினெட்டு வயதானவுடன் அம்மாவிடம் பணம் வாங்கிக்கொண்டு, ஓவியராக போகிறேன் என்று சொல்லி, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவுக்கு ரயிலேறி விட்டார்.. ஆனால் பிற்காலத்தில் ஜெர்மனிய வரலாற்று புத்தகங்களில், புதியதொரு சித்தாந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஹிட்லர் தாயை பிரிந்ததாக கூறப்பட்டது.. ஆனால் உண்மையிலேயே அவர் வியன்னாவின் 'Art Academy' யில் சேரவே தாயை பிரிந்தார்.. ஆனால் அதற்கான நுழைவுத்தேர்வில் தோல்வி அடைந்தார்.. அடுத்த வருடமும் முயற்சி செய்தார்.. ஆனால் இம்முறை தேர்வில் கலந்து கொள்ளவே அனுமதியில்லை.. அவமானங்களும் தோல்விகளுமே மிகப்பெரிய சாதனையாளர்களின் இளமைக்காலத்தை நிரப்புகிறது.. ( அமிதாப், இளமைக்காலத்தில் குரல் சரியில்லை என டெல்லி வானொலி நிலையத்தால் நிராகரிக்கப்பட்டது என் நினைவிற்கு இப்போது வருகின்றது..)
       ஹிட்லரின் தாயும் அச்சமயத்தில் இறந்து போனார்.. தாயின் சேமிப்பும், ஒரு வீடும் ஹிட்லருக்கு வந்து சேர்ந்தது.. மாணவராக இல்லையெனில் உதவிப்பணம் நின்றுவிடும் என்பதால், தான் ஒரு மாணவர் எனப் பொய்யான சர்ட்டிபிகேட் தயாரித்து உதவிப்பணம் தொடர்ந்து வருமாறு பார்த்துக்கொண்டார்.. ஹிட்லரின் கில்லாடித்தனம் இங்குதான் முதன்முதலாக வெளிப்பட்டது..
       இக்காலக்கட்டத்தில் ஹிட்லர் நாடோடியாக திரிந்தார்.. தெருவோர டீக்கடைகளில் நாளிதழ்களை ஒருவரி விடாமல் படிக்கும் பழக்கம் அப்போதுதான் தோன்றியது.. அவருக்கு அரசியல் ஈடுபாடு உருவானதும் அப்போதுதான்.. ( டீக்கடைகளில் நாளிதழ் படிப்பவர்களிடம் உஷாராக இருக்கவும்.. அவர்கள் வருங்காலச் சர்வாதிகாரிகளாக மாறலாம் ). தான் வரைந்த ஓவியங்களை விற்று காலத்தை ஓட்டினார்.. இது வரையிலும் அவருக்கு ஒரு நண்பன் கூட கிடைக்கவில்லை.. ஏனெனில் யாரிடமும் அவர் பேசாமல் அவர் எப்போதும் இறுக்கமாகவே இருப்பது தான் காரணம்...( இளமையில் ஒரு நண்பனை கூட பெற முடியாதவர், பிற்காலத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை தனது மந்திரப்பேச்சால் ஆட்டிப்படைத்தது எத்தகைய சாதனை...)
       பணம் கரைந்தது.. பிழைக்க வழி தேடி ஜெர்மனிக்கு வந்தார்.. வாழ்வில் எதாவது சாதித்து சிறிய அளவிலாவது 'ஹீரோ' ஆகவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது  அப்போதுதான்.. ஓவியராக முடியவில்லை.. ராணுவத்திலாவது சேரலாம் என்றெண்ணி ஜெர்மனிய ராணுவத்தில் சேர்ந்தார்.. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து.. முதல் உலகப்போர் தொடங்கிய சமயம் அது..


        இதுவரை ஹிட்லரின் வாழ்க்கை முழுவதும் தோல்விமயமே.. அடிமைத்தனமான குழந்தை பருவம்.. பள்ளிப்படிப்பையும் அவர் முடிக்கவில்லை.. பிறகு ஓவியராகும் முயற்சியிலும் படுதோல்வி.. வேலை இல்லாமல் வியன்னா நகரில் நடோடித்தனமான அலைச்சல்.. இளம்வயதிலேயே பெற்றோருடைய இழப்பு.. ஒரு நண்பர் கூட கிடையாது.. காதல் என்பது இல்லவே இல்லை.. ராணுவத்திலும் பெரிதாக வேலை உயர்வு கிடைக்கவில்லை..


        ஹிட்லர் பிறந்தது 20, ஏப்ரல் 1889 -இல். இறந்தது 30, 1945 -இல். இந்த ஐம்பத்தாறு ஆண்டுகளில், முதல் முப்பது௦ ஆண்டுகள் ஹிட்லர் என்று ஒரு மனிதர் இருந்தார் என்பது அவருடைய சொந்த ஊரில் கூட யாருக்கும் தெரியாது.. ஆனால் மீதி 26 ஆண்டுகளில் அவரை பற்றி தெரியாதவர்களே உலகில் கிடையாது..
        ஹிட்லரின் சாதனைகளையும் வேதனைகளையும் வரும் பதிவுகளில் காணலாம்..
(பின் குறிப்பு : நான் ஹிட்லரை பற்றி முழுமையாக தெரிந்தவன் இல்லை.. பிரபல விமர்சகர் மதனின் புத்தகத்தில் நான் படித்தவற்றை பகிர்கிறேன்.. மதன் தவறாக எண்ணமாட்டார் என்று நம்புகிறேன்.. தவறு இருந்தால் திருத்தவும்...)

Friday, April 09, 2010

ஹிட்லர் - ஒரு சாது, மேதையாகி, மிருகமாய் இறந்த உண்மை..

                 மிகப் பெரிய பொருளாதார நிபுணராக உலக மக்களால் நினைவு கூறப்பட்டிருக்க வேண்டியவர் ஹிட்லர்.. உள்ளிருந்த மிருகம் முழித்து கொண்டதால் கொடூர மிருகமாக அறியப்படுகிறார்.. நிச்சயமாக நான் ஹிட்லரை புகழ்பவனோ, இகழ்பவனோ கிடையாது.. படித்ததை பகிர்ந்திட நினைக்கிறேன்.. 
               சாதுவாக வளர்ந்து, வேலை இல்லாமல் திரிந்து, உருப்படாமல் போக இருந்தவன், முதல் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்து, சிறிய கட்சியில் சேர்ந்து, திறமையால் ஆட்சியை பிடித்து, ஜெர்மனியின் பொருளாதார தரத்தை உயர்த்திய மேதையாக திகழ்ந்ததும், உள்ளிருந்த மிருகம் விழித்து கொண்ட காரணத்தால் கொடூர மனித வேட்டையாடும் ஓநாயாக மாறி, போரில் தோற்று , கடைசியில் மனநிலை பாதிக்க பட்டவனாக மற்றவர்களால் பரிதாபமாக பார்க்கப்பட்டு, மனம் திருந்தாமலேயே காதலியுடன் உயிரை மாய்த்துக் கொண்டது, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.. 
          சமீபத்தில் ஹிட்லரை பற்றிய சில துணுக்குகளை மதனின்(கார்டூனிஸ்ட்) 'மனிதனுக்குள்ளே மிருகம்' என்ற நூலில் படித்தேன்.. மேலே கூறியது நான் படித்ததின் சுருக்கம்.. விரிவாக பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசை.. தொடர்ந்திடலாமா என உங்களின் கருத்தை கேட்கிறேன்...

Tuesday, April 06, 2010

அங்காடித்தெரு - இது பாராட்டும் விமர்சனம் அல்ல..

அங்காடித் தெரு படம் பார்த்தேன்.. வித்தியாசமாகவே இருந்தது.. நல்ல முயற்சி.. சில படங்கள் என்னை அதிகமாகவே பாதித்துள்ளது.. அந்த அளவுக்கு ஒன்றும் பெரிதாக என்னை பாதிக்கவில்லை என்றே படம் பார்த்து வெளியே வந்ததும் தோன்றியது. அதன் பிறகு பெரிதாக அன்றிரவு வரை எனக்கு ஒன்றும் தோன்றவில்லை... ஆனால் அன்றிரவு சில எண்ணங்கள் மனதினில்... வேலைக்காக இன்னொரு ஆம்பிளையின் அத்துமீறல்களை மனதிற்கு பிடிக்கவில்லை என்றாலும் சகித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் அத்தகைய துணிக்கடைகளில் பெண்கள் பணிபுரிகின்றனரா.. அந்த அளவுக்கு மானம் விட்டு பிழைக்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளதா.. இல்லையெனில் மிகை படுத்த பட்டிருக்கிறதா.. அவ்வாறு அது உண்மையெனில் லாட்ஜ்களில் ரைட் போவதை விட மிக முக்கியமானது அத்தகைய கடைகளில் நடவடிக்கை எடுப்பது.. ஆனால் எல்லா துறைகளிலும் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சில அத்துமீறல்கள், இந்த படத்தில் மிகை படுத்தி காட்ட பட்டிருக்கிறதோ என தோன்றுகிறது.. அவ்வாறு எனது எண்ணம் உண்மையெனில் வசந்தபாலன் மிகவும் கண்டனத்திற்குரியவர்.. ஏன் என்றால்.. இப்படத்தில் அஞ்சலியின் கதாப்பாத்திரம் அத்தகைய பணிபுரியும் சிறு வயது பெண்களின் பிரதிநிதியாக தத்ருபமாக படைக்கபட்டிருக்கிறது.. தேர்ந்த நடிப்பு.. வேலைக்காக சூப்பர்வைசர் கசக்கிய போது பேசாமல் இருந்தேன் என அவள் சொல்லும் போது பரிதாபம் பொங்குகிறது.. ஆனால் உண்மையாகவே குடும்பத்தை விட்டு இங்கு பணிபுரியும் மற்ற பகுதிகளை சேர்ந்த பெண்களின் வீட்டில் இந்த படம் அவர்களுக்கு எந்த மாதிரியான பேரை பெற்று தரும்?? அந்த பெண்களை சார்ந்தவர்களிடம் அவர்களை பற்றிய எத்தகை எண்ணத்தை ஏற்படுத்தும்?? அந்த பெண்களின் ஊர்களில்... அவளுக்கு திருமணம் பார்க்க ஏற்பாடு செய்திருந்த இடங்களில்... நிச்சயம் அவள் மேல் பரிதாபத்தை மட்டும் அல்ல.. எதிர்மறையான எண்ணங்களை கூட ஏற்படுத்தும்... இது பிதற்றலாக கூட இருக்கலாம்.. ஆனால் அத்தகைய பெண்கள் வரும் பகுதிகளை சார்ந்த மக்கள் பெரும்பாலனோர் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் உண்மையானவை தான் என்று எண்ணுபவர்கள் ஆகத்தான் இருக்கின்றனர்... இதை நாம் மறுக்க முடியாது.. அங்காடித்தெரு போன்ற படங்கள் அத்தகைய பெண்களின் வாழ்க்கை நிலையை நிச்சயம் உயர்த்த போவதில்லை.. ஆனால் ஒரே ஒரு பெண்ணின் வீட்டில் அவளை பற்றிய தவறான எண்ணத்தை அந்த படம் ஏற்படுத்தினாலும் அது மன்னிக்க முடியாத குற்றம்...

Friday, April 02, 2010

ஐபிஎல் - ஒரு சிறிய வருத்தம்.




(அல்லது)



ஐபிஎல் போட்டிகள் நடை பெற்று கொண்டிருகின்றது... விறுவிறுப்பாகவே உள்ளது.. ஆனால் எனக்கு சிறிய நெருடல்.. அது சற்று மிகையான எண்ணமாக கூட இருக்கலாம்..
கிரிக்கெட் போட்டிகள் - பல விமர்சனங்கள் உடையதாக இருந்தாலும் நான் நம்புகிற ஒரு விஷயம்.. அது பல இந்தியர்களை ஒன்றினைக்கின்றது.. பல வித வேற்றுமைகள் நிறைந்துள்ள நமது நாட்டில் நம்மை இணைக்கும் சில முக்கிய விஷயங்களில் கிரிக்கெட்டும் ஒன்று என்று நம்புகிறேன்... எல்லையில் போரில் ஈடுபட்டு கொண்டிருக்கும் வீரர்களுக்கு, இந்திய கிரிக்கெட் போட்டிகள் மிக சிறந்த ஒரு உந்துகோலாக இருப்பதை நாம் மறுக்க முடியாது..
கல்கத்தா கங்குலியையும், பாம்பே சச்சினையும், டெல்லி சேவாகையும் நாம் இந்தியர்களாக தான் பார்த்து கொண்டிருந்தோம்.. சச்சின் நமது தேசத்தில் ஒருவன் என்று பெருமையுடன் கொண்டாடுகிறோம்...

ஆனால் ஐபிஎல்??????????
அவர்களை பிரித்து பார்க்க வைக்கிறதே.. சென்னை, பாம்பே, கல்கத்தா என்று குறுகிய வட்டத்தில் நம்மை அடைக்கின்றதோ என எண்ண வைக்கின்றது... சச்சின் அவுட் ஆக வேண்டும் என்று நினைக்கிறோம்... ஹைடன் விலாச வேண்டும் என்று வேண்டுகின்றோம்.. இது நல்லதா.. ஏற்கனவே கேரளா, கர்நாடகாவிடம் குடிமி பிடி சண்டை..
மாநிலங்கள் கடந்து நாம் ஒற்றுமையுடன் இருக்கும் சில விஷயங்களில் ஒன்றாக இதுவரை கிரிக்கெட் இருந்து வருகிறது..
இனியும் இருக்குமா...

அடிமையாகி போன தமிழக மக்கள்..

எப்படிப்பட்ட அடிமை என்று கேட்கின்றீர்களா.. நன்றி காட்டும் அடிமையாக போனோம்.. ஆம்.. நன்றி உடையவர்களாக இருப்பது தவறில்லை...எண்ணற்ற திட்டங்கள் மூலம் நமக்கு நன்மை செய்தவர்களுக்கு நன்றி காட்டினால் தவறில்லை.ஆனால் ஒன்றிரண்டு நாள் செலவிற்கு பணம் தருபவர்களுக்கு நன்றி காட்டுவது கேவலமானது.. அரசியலும் ஒரு வியாபாரம் தான்.. தற்போது மிகச் சிறந்த வியாபாரிகளுடன் திகழ்கிறது தமிழகம்.. பாமர மக்கள் ஏமாற்ற படுகிறோம் என தெரிந்தே ஏமாறுகிறார்கள்.. அதில் ஒரு வலி நிறைந்த சுகம் கிடைகின்றது போலும்...